சுஷ்மா தலைமையிலான இந்திய நாடாளுமன்ற தூதுக்குழு வவுனியா நலன்புரி நிலையத்திற்கு விஜயம்

இலங்கைக்கு நேற்று வந்த இந்திய நாடாளுமன்ற தூதுக்குழு இன்று காலை 10 மணியளவில் வவுனியா செட்டிகுளத்தில் அமைந்துள்ள ஆனந்தகுமாரசாமி முகாமிற்கு உலங்குவானூர்தி மூலம் வந்திறங்கினர்.                                            இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வரவேற்றார்.

அதன்பின்னர் மீள்குடியேற்றம் மற்றும் மக்களின் தற்போதைய நிலை தொடர்பில் தூதுக்குழு பல்வேறு கேள்விகளை கேட்டது.

அவற்றிற்கு பதிலளித்த அரச அதிபர் திருமதி. பீ.எம்.எஸ். சார்ளஸ்,

மூன்று லட்சம் மக்கள் 2009 ம் ஆண்டு இடம்பெயர்ந்து வந்திருந்ததாகவும் தற்போது அவர்களில் 98 வீதமானோர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் எஞ்சியுள்ள 2 சதவீத மக்களை எதிர்வரும் யூன் மாதம் 30 ம் திகதிக்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என தூதுக்குழுவிடம் தெரிவித்தார்

30 வருடகாலமாக நடைபெற்ற மோதலினால் பாதிக்கப்ட்டுள்ள வடபகுதி மக்களுக்கு அவர்களின் தொழில்துறையை மேம்படுத்த இந்தியா நவீன் தொழில்நுட்ப உதவிகளை செய்ய வேண்டுமென அரச அதிபர் தூதுக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்தார்

அதன் பின்னர் நேரடியாக மக்களை முகாமுக்குள் சென்று தூதுக்குழுவினர் சந்தித்து உரையாடினர். அதன்போது தம்மை சொந்த இடத்தில் குடியேற்றுமாறு தூதுக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்த மக்கள் தமக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்கள் போதாது என்றும் அரிசி மற்றும் சில தானியங்கள் தரமற்றவை எனவும் தெரிவித்தனர்.

இந்திய நாடாளுமன்றக்குழு செட்டிகுளம் நலன்புரி நிலையத்திற்கு தமது விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடியிருந்தனர்.

நேற்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய நாடாளுமன்றக்குழு உலங்கு வானூர்த்தி மூலம் இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் தலைமையில் செட்டிகுளம் கதிர்காமர் நலன்புரி நிலையத்தின் மைதானத்தில் வந்திறங்கியதுடன் வவுனியா மாவட்ட செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் இந்திய தூதுவராலயத்தின் யாழ்ப்பாண துணைத்தூதுவர் ஆகியோர் அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

அதன்போது மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோன் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் வன்னிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுனந்த பெரேரா உட்பட அரச அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர்.

இதனையடுத்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றத்தின் தாமதம் மற்றும் எவ்வாறான சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றது போன்றவற்றை இந்திய நாடாளுமன்ற குழுவினருக்கு தெளிவுபடுத்தினார்.

இதன்போது நாடாளுமன்ற குழு பிரதிநிதிகள் குறுக்கிட்டு தமது கேள்விகளை தொடுத்தவண்ணமிருந்தனர்.

குறிப்பாக மக்களின் மீள்குடியேற்றம், அவர்களின் காணிப்பிரச்சினை, நலன்புரி நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள், பாடசாலை, தொழில் பிரச்சனைகள் உட்பட வாழ்வாதார உதவிகள் தொடர்பிலும் கேட்டறிந்தனர்.

இவர்களது கேள்விகளுக்கு மாவட்ட அரசாங்க அதிபர், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் மற்றும் வன்னிக் கட்டளைத்தளபதி ஆகியோர் பதிலளித்திருந்தனர்.

இதன்போது வன்னிக் கட்டளைத்தளபதி மீள்குடியேற்றத்தில் உள்ள பின்னடைவுகளுக்கு மிதிவெடிகள் உள்ளதெனவும் அது விடுதலைப்புலிகளினால் வைக்கப்பட்ட மிதிவெடிகளை அகற்றுவதிலேயே தாமதம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதனை அடுத்து மக்களை பார்வையிடுவது தொடர்பில் இந்திய நாடாளுமன்ற குழுவினர் கோரியதற்கு அனைவரும் சுதந்திரமாக சென்று பார்வையிட முடியுமென கூறப்பட்டதற்கிணங்க குழுவினர் மற்றும் ஊடகவியலாளர்கள் மக்களிடம் சென்று உரையாடினர்.

இதன்போது மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் வெளிப்படையாக தெரிவித்திருந்தனர். தம்மை மீள்குடியேற்றவேண்டும்.

தமக்கு தரப்படுகின்ற நிவாரணங்கள் தரங்குறைந்ததாகவுள்ளது. மீண்டும் தம்மை முகாம்களிலேயே குடியேற்றுவதற்கு முயற்சிக்கின்றனர். காணாமல்போனோர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள். முகாம்களில் தம்மால் வசிக்க முடியாததன் காரணங்கள் என்பவற்றை வெளிப்படையாக தெரிவித்ததுடன் சிலர் தாம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டால் கடல் தொழில் செய்ய முடியாதுள்ள நிலைமை தொடர்பிலும் எடுத்துக்கூறினர்.

இதன்போது இந்திய நாடாளுமன்றக் குழுவில் அங்கம் வகித்த சதர்சன நாச்சியப்பனிடம் நிவாரணமாக வழங்கப்பட்ட தானிய வகைகளை எடுத்துக்காட்டியதுடன் சிறிதளவை அவரிடம் கொடுத்து இந்த தானியம் உணவுக்காக பயன்படுத்த முடியாதுள்ளதெனவும் தெரிவித்தனர்.

இவற்றை செவிமடுத்த இந்திய நாடாளுமன்ற குழுவினர் தாம் இது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி உட்பட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடுவதாக தெரிவித்தனர்.

இதன்பின்னர் நலன்புரி நிலையத்தின் கொட்டகை ஒன்றினுள் பார்வையிடுவதற்காக சென்ற இந்திய நாடாளுமன்ற குழுவினர் மக்களின் வாழ்வியல் முறை தொடர்பில் பார்வையிட்டனர்.

இக்குழுவில் அங்கம் வகித்திருந்த தமிழநாட்டை சேர்ந்த பிரதிநிதிகள் தனித்தனியாக பிரிந்து சென்று மக்களிடம் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் அதிகளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் இராணுவ புலனாய்வாளர்களும் அதிகளவில் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 நலன்புரி நிலையத்தில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்துபசாரமும் இடம்பெற்றிருந்தது.
By:-yasikanth


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.