பெற்றோரை இழந்த யுவதியுடன் விடுதியில் தங்கியிருந்த கனடாவைச் சேர்ந்த நபர் கைது
வவுனியாவிலுள்ள ஹோட்டலொன்றில் 16 வயதான யுவதியொருவருடன் தங்கியிருந்த குற்றச்சாட்டுக்குள்ளான 67 வயதான ஆணொருவரையும், ஹோட்டலில் தங்குவதற்கு அனுமதியளித்த ஹோட்டல் உரிமையாளரையும்16-04-2012 வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இலங்கையைச் சேர்ந்த, கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட 67 வயதான ஆணொருவரும் 16 வயதான யுவதியொருவரும் வவுனியாவிலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்துள்ளனர்.
இவர்கள் தந்தை, மகளெனக்கூறி ஹோட்டல் விருந்தினர் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமை பொலிஸாரினால் கண்டறியப்பட்டதாகவும் இது குறித்து சந்தேகமடைந்த பொலிஸார், இவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது தந்தை, மகள் உறவில்லையெனத் தெரியவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடமிருந்து இலத்திரனியல் பாலியல் சாதனங்களும் மருந்துப் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து 16/04 வவுனியா நோக்கி கனேடியப் பிரஜையுடன் குறித்த யுவதியும் அவரது உறவினரொருவரும் வந்ததாகவும் குறித்த உறவினர் இடைவழியில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் ஹோட்டலொன்றில் தங்கியிருந்ததாகவும் வவுனியாப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 16 வயதான குறித்த யுவதி, தனது பெற்றோரை இழந்த நிலையில் குறித்த உறவினருடனையே வசித்து வந்துள்ளதாகவும் இவர்களுக்கான பண உதவியை இக்கனேடியப் பிரஜையே மேற்கொண்டு வந்ததாகவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வயது வித்தியாசத்தை கவனிக்காது இவர்கள் இருவரையும் ஹோட்டலில் தங்குவதற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டில் ஹோட்டல் உரிமையாளர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிபதி அலெக்ஸ்ராஜா 17/04/2012 உத்தரவிட்டார். அத்துடன், குறித்த யுவதியை வைத்தியப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
By:-yasikanth