மோட்டார் சைக்கிளையே லஞ்சமாகப் பெற்ற போக்குவரத்துப் பொலிஸார்!- வவுனியாவில் சம்பவம்
போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகளிடம் பணத்தைக் கறக்கும் கைங்கரியங்களில் வவுனியா போக்குவரத்துப் பொலிஸாரில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என்று பலதரப்பினரும் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.
வவுனியா மாவட்டத்திலுள்ள பிரதான வீதிகளில் பயணம் செய்யும் வாகனச் சாரதிகளிடம், ஆவணங்களைப் பரிசோதிக்கும் போக்குவரத்துப் பொலிஸார் அவை இல்லாதவர்களிடம் பணம் அபகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனராம்.
இதேவேளை, வாகன அனுமதிப் பத்திரங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கருத்தில் கொண்டு வாகன அனுமதிப் பத்திரத்தை எதிர்வரும் மார்ச் மாதம் வரை பரிசோதிப்பதை நிறுத்துமாறு வடமாகாணப் பிரதம செயலாளர். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பியதுடன் அதன் பிரதிகள் அனைத்தும் பிரதேச செயலகங்களின் அறிவித்தல் பலகையிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக பிரதேச செயலர்களாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இவ்வறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவற்றைப் பொருட்படுத்தாத போக்குவரத்து பொலிஸார் வாகனச் சாரதிகளை வழி மறித்து வாகன அனுமதிப் பத்திரத்தைப் பரிசோதனை செய்கின்றனர். அது இல்லாதவர்களிடம் பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் இலக்கத் துண்டைக் (டோக்கன்) காட்டுமாறும் கேட்கின்றனர். அவை இரண்டும் இல்லாதவர்களிடம் பணம் கறக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இரவு வேளைகளில் மன்னார் - வவுனியா பிரதான வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் ரோந்து செல்லும் போக்குவரத்துப் பொலிஸார் அந்த வீதியால் செல்வோரிடம் தம் கைங்கரியங்களைக் காட்டி வருவதாகத் தெரியவருகிறது .
குறிப்பாக, மதுபோதையில் வாகனம் ஓட்டுவோரை வழிமறித்து அதனைச் சாட்டாக வைத்து அவர்களை நீதிமன்றம் அனுப்பப்போவதாக மிரட்டுகின்றனர். இதற்குப் பயந்து அவர்கள் லஞ்சமாக பணத்தைக் கொடுக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர் .
இதேவேளை நெளுக்குளம், வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த வாகனச் சாரதி ஒருவர் மதுபோதையில் வந்ததினால், பொலிஸார் அவரிடம் கேட்ட 5ஆயிரம் ரூபா கேட்டுள்ளனர், அதனால், அவர் தனது மோட்டார் சைக்கிளையே தானமாக வழங்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்,
By:-yasikanth